Product Description
நிலமடந்தைக்கு | NILAMADANTHAIKKU
நிலமடந்தைக்கு | NILAMADANTHAIKKU
Language - TAMIL
Couldn't load pickup availability
Share
Low stock
முன் மாதிரியாகப் பலரை உதாரணங்களாகச் சுட்டிக் காட்டுவது நம் அனைவருக்கும் எளிது; ஆனால், தன்னையே பலருக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்வது என்பது அரிது. இந்த அரிதான கூற்றைப் பொய்யாக்கி, தனது எண்ணத்தால், சொல்லால், செயலால் தன்னையே பிறருக்கு முன்னுதாரணமாக வெளிப்படுத்திய தகைமை, காந்திகிராமத்தின் நிறுவனர், டாக்டர் டி.எஸ்.செளந்திரம் அம்மா அவர்களின் செல்ல மகள், பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களென்றால் அது மிகையாகாது.
பட்டிவீரன்பட்டிக்கு அருகில் உள்ள அய்யன்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த, இராமசாமி – நாகம்மையார் என்ற ஏழை உழைப்பாளர்களுக்கு, 1926ஆம் ஆண்டு முதல் பெண் மகவாகக் கிருஷ்ணம்மாள் பிறந்தார். 1950இல் காந்தி கிராமத்தில் செளந்தரம் அம்மா முன்னிலையில் ஜெகந்நாதன் அவர்களைக் கரம்பிடித்தார் அன்றுமுதல் தற்போதைய தனது 93ஆவது அகவை வரையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காவும் ஏழை உழைப்பாளர்களுக்காவும், நிலமில்லா கூலித் தொழிலாளர்களுக்காவும் போராடிக் கொண்டிருக்கிறார். நிலமீட்புப் போராட்டமாகட்டும், சர்வோதய இயக்கச் செயல்பாடுகள் ஆகட்டும் அனைத்திலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தியும், அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை என்ற வள்ளலாரின் வாக்கை உச்சரித்தும் தனது இலக்கை நோக்கியே அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இத்தம்பதியினர் ஆரம்பித்த லாஃப்டி அமைப்பு மூலம் மண் குடிசையில் வாழ்ந்த ஏழைகளுக்கு சுமார் 500 கல் வீடுகளைக் கட்டிக் கொடுத்தது, விளைநிலங்களில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு வெற்றிபெற்றது, கீழத்தஞ்சை வடபாதி மங்கலத்தில் மக்கள் ஆதரவுடன் போராடி, கரும்புப் பண்ணையை கலைத்து அந்த நிலத்தை தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து, முத்துபேட்டை சீலத்தநல்லுரில் தரிசாகப் போடப்பட்ட நிலங்களை மீட்டு பெண்களுக்கு பட்டா வாங்கித் தந்த்து, நாகை மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் உதவியுடன் 1000 ஏக்கர் நிலத்தை நிலச்சுவாந்தார்களிடமிருந்து பெற்று 1000 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வாங்கித் தந்தது, கீழ்வெண்மணி, வலிவலம் போராட்டம், ஆரம்ப காலத்தில் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, நிலங்களைத் தானமாகப் பெற்று, ஏழைகளுக்கு விநியோகித்த்து, பீகார் மாநிலத்தில் போராடி நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் பெற்றுத் தந்தது என இந்த இணைபிரியா தம்பதியினரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அவை நீண்டுகொண்டே போகும்.
காந்திஜிக்கு எவ்வாறு ஒரு கஸ்தூரிபாய் பின்புலமாக இருந்து, அவரது அனைத்துச் செயல்பாடுகளிலும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்தாரோ அதுபோலவே, கிருஷ்ணம்மாள் அவர்களின் அனைத்துப் போராட்டங்களிலும் முயற்சிகளிலும், திட்டங்களிலும் பூமிதான இயக்கத்தின் தமிழக முன்னோடியான ஜெகந்நாதன் அவர்கள் அவருக்கு உற்ற பங்காளராகவும் ஏற்ற செயல்வீர்ராகவும், போராளியாகவும் இருந்து அனைத்திலும் அவரை வெற்றி பெறச் செய்தார். பெண்களை போராட்டங்களில் அவரை வெற்றி பெறச் செய்தார். பெண்களை போராட்டங்களில் முன்னேடுக்க வைத்தில் கிருஷ்ணம்மாளுக்கு நிகர் அவரே.
தனது தொன்னூற்று மூன்றாண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் ஏழை எளியவர்க்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஆபத்பாந்தவனாக இருந்த, அரும்பெரும் சேவைகள் புரிந்து அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா நினைவில் இடம்பெற்றுள்ள ‘’கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் இயக்க வரலாறு’’ என்கிற உட்தலைப்பில், அவரது சாதனைகளையும் வேதனைகளையும் தொடுத்து வெளிவரும் இந்நூல், இக்கால இளைஞர்களுக்கும், சமூக அக்கறையாளர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்க்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்குமானால், அதுவே அவரது சேவைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் எனக் கருதுகிறேன்.
